கொல்லிமலையில் போலீசாரை தாக்க முயன்ற விவசாயி கைது..!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வர் கோயிலில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். வாழவந்தி நாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கூட்டத்திற்கிடையே டூவீலர் ஓட்டி வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, டூவீலரை கைப்பற்றினர்.
உடனே, அந்த நபர் அங்கிருந்து சென்று தேவனூர் நாடு அரிப்பலாப்பட்டி பகுதியைச் சேர்ந்த உறவினரான விவசாயி செல்வன் (53) என்பவரை அழைத்து வந்தார். அவரும் குடிபோதையில் இருந்தார். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசாரை தாக்க முயன்றார். இதையடுத்து, செல்வனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவரை கைது செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu